Monday 10 July 2023

 

தம்பித்துரை அண்ணையும் பேரனும் ஆறு ஐமிச்சங்களும்!

 

ரக்கப்பரக்க எனது வீட்டுக்கு பேரனுடன் வந்தார் தம்பித்துரை அண்ணை. அவர் எனது வீட்டிலிருந்து பத்து நிமிஷ நடைதூரத்திலுள்ள மகளின் வீட்டில் வசிக்கிறார். ஊரில் மட்டுமல்ல சிட்னியிலும் அவரை தமிழரசு தம்பித்துரை என்றால்தான் தெரியும். அந்த அளவுக்கு இருபதாம் நூற்றாண்டின் அறுபது எழுபதுகளில் தமிழரசுக் கட்சிக்காகவே உயிரைக் கொடுத்து உழைத்தவர். இதனால் இன்றும் அரசியல் மற்றும் உலக நடப்புக்கள் அனைத்தையும் ஆதியோடந்தமாக அறிந்து வைத்திருப்பார். தம்பித்துரை அண்ணை இலங்கையில் அரச விசாயப் பண்ணை ஒன்றை தனி ஆளாக நின்று திறம்பட நிர்வகித்தவர். அவரின் அரசியல் நிலைப்பாடு காரணமாக சிங்கள மேலதிகாரியுடன் முரண்பட்டு அரசாங்க வேலையைத் தூக்கி எறிந்தபின், ஊரில் பல விவசாயப் புரட்சிகள் செய்தவர். சுற்றி வளைத்துப் பார்த்தால் அவர் எனக்கு உறவும்கூட. அந்த பந்தமும் பாசமும் சிட்னியிலும் தொடர்வதினால் தனது அறிவெல்லைக்கு அப்பாற்பட்ட ஐமிச்சங்களைத் தெளிவுபடுத்துவதற்கு அவர் என்னிடம் வருவார். அந்த வகையில், இன்றும் தம்பித்துரை அண்ணைக்கு பல ஐமிச்சங்கள். உள்ளதைச் சொன்னால் பயம் கலந்த ஐமிச்சம். அதுவும் அவர் அன்றாடம் இரண்டு வேளை சாப்பிடும் சோறு பற்றிய ஐமிச்சம்.

 

ஐமிச்சம் 1:

பிளாஸ்டிக் அரிசி சாத்தியமா?

சீனாவிலை, பிளாஸ்டிக் அரிசி செய்யிற படத்தைப் போட்டுக்காட்டு ராசா’ என பேரனிடம் சொன்னார் தம்பித்துரை அண்ணை. சீன மொழியில் விளக்கம் சொல்லும் ஒரு யூ-டியூப் வீடியோ, பேரனின் ஐ-பாட்டில் ஓடியது. முதலாவது காட்சியில், மெல்லிய பிளாஸ்டிக் தகடுகள் இயந்திரம் ஒன்றுக்குள் போடப்படுகிறது. அடுத்து நூல்கள் போன்ற அமைப்பு ஒரு இயந்திரத்திலிருந்து இன்னொரு இயந்திரத்துக்குப் போவது காண்பிக்கப்படுகிறது. மூன்றாவது காட்சியில் இயந்திரத்திலிருந்து அரிசி வெளியேறுகிறது. ஆனால் இந்த மூன்று காட்சிகளுக்குமான தொடர்புகள் எதுவும் அங்கு காட்டப்படவில்லை. இதேபோன்று ‘பிளாஸ்டிக் அரிசி’ பற்றிய பல யூ-டியூப் வீடியோக்களும் தகவல்களும் அண்மைக் காலமாக (2017) ஊடகங்களிலும் வலைத்தளங்களிலும் வெளிவந்ததை நானும் பார்த்திருக்கிறேன். பிளாஸ்டிக்கில் அரிசி செய்வது சாத்தியமா? பிளாஸ்டிக் அரிசி, உண்மையான அரிசிபோல கொதி தண்ணீரில் வேகுமா? என்ற பல கேள்விகள் எமக்குள் எழுந்தாலும் பிளாஸ்டிக் என்றவுடன் எமக்குள் ஒருவித பயம் ஏற்படவே செய்கிறது. எனவே இதன் நம்பகத் தன்மை பற்றி அறியவே தம்பித்துரை அண்ணை என்னிடம் வந்திருந்தார்.

பிளாஸ்டிக் அரிசி, சந்தைக்கு வந்திருப்பதாகச் சொல்வது முற்றிலும் புரளிக் கதை. 2011-ஆம் ஆண்டு வியட்நாமிய இணையப் பத்திரிகை ஒன்றுதான் முதன்முதலில் பிளாஸ்டிக் அரிசி சந்தைக்கு வந்திருப்பதாகவும், அது சீனாவில் உற்பத்தி செய்யப்படுவதாகவும் செய்தி வெளியிட்டது. அதன் பின்னர், பிளாஸ்டிக் அரிசி குறித்து வெளிவந்த செய்திகள் அனைத்துமே வியட்நாமிய இணையப் பத்திரிகை வெளியிட்ட செய்தியைச் சார்ந்தே இருந்தன’ என சுருக்கமாகவிளக்கம் சொன்னேன் நான்.

படிக்கிற பெடியளுக்கு சொல்லுற மாதிரி எனக்கும் சொல்லாமல் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லு தம்பி’ எனக்கேட்டார் தம்பித்துரை அண்ணர்.

சீனாவில் வுச்சாங் என்னும் இடத்தில் விளையும் அரசி மிகப் பிரபல்யமானது. இது நல்ல சுவையும் மணமும் கொண்டது. இந்த அரிசி அவியும்போது வெளிவரும் வாசைன பசியைத் தூண்டும் என்றும் சொல்லப்படுகிறது. வுச்சாங் அரிசி விலையானதால் வியாபாரிகள் கலப்படம் செய்வதாகவும் இதனுடன் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட போலி அரிசியை கலப்பதகவும் வியட்நாமிய இணையப் பத்திரிகை மேலும் தெரிவித்தது.

ஓஹோ!

இந்த கலப்பட அரிசியானது உருளைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு போன்ற மாச்சத்துள்ள கிழங்குகளை அரைத்து, அரிசி போன்று செய்யப்படுவதாகவும் இரசாயனங்களைப் பூசி அவை விற்கப்படுவதாகவும் சொல்லப்பட்டது. சீனாவின் புகழ்பெற்ற ‘வுச்சாங்’ரக அரிசியைப் போன்று தோற்றமளிக்க கலப்பட ரக அரிசிகளில் வாசனைத் திரவங்கள் தெளிக்கப்படுவதாகவும் பின்னர் செய்திகள் வெளிவந்தன. ஆனால் எந்த செய்தியிலும் நேரடியாக பிளாஸ்டிக் கலக்கப் பட்டதாகத் தகவல்கள் இல்லை.

நல்ல அரசியல்தான்!

பிளாஸ்டிக்கை அரைத்து அரிசிகளின் அச்சுகளாக மாற்றுவதன் மூலம் எந்தவொரு வணிகலாபமும் பெற்றுவிட முடியாது. கலப்படம் செய்யப்படுவது இலாப நோக்கத்திற்காக மட்டும்தான். ஒரு கிலோ அரிசியைவிட ஒரு கிலோ பிளாஸ்டிக்கின் விலை அதிகம் என்பதால் வியாபாரி இதில் எந்தவித இலாபத்தையும் பெறமுடியாது. அதுமட்டுமல்ல அரிசியில் பிளாஸ்டிக்கை கலந்தால் உலை கொதிக்கும்போது அல்லது அரிசி அவியும்போது பிளாஸ்டிக் உருகிவிடுமல்லவா?

அதுதானே…!

நாம் உண்ணும் பலவிதமான உணவுகளில் கலப்படம் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. சில துரித உணவுகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும், குறித்த வடிவம் பெறுவதற்கும், கெட்டுப்போகாமல் இருப்பதற்கும் நெகிழ்வுத் தன்மையுள்ள சில வேதிப் பொருட்கள் கலக்கப்படுகின்றன என்பது உண்மையே. ஆனால், ஒட்டுமொத்தமாக பிளாஸ்டிக்கைக் கொண்டு வாளி, கோப்பை, கதிரை, மேசை செய்வது போல, அரிசி தயாரிப்பது சாத்தியமில்லை.

ஐரோப்பிய நாடுகளில் திடீர் நூடுள்ஸ் போன்று திடீர் அரிசிப் பைகள் விற்கப்படுகின்றன. அந்த அரிசிப் பையை கொதி தண்ணீரில் போட்டால் சில நிமிடங்களுக்குள் பைக்குள் இருக்கும் அரிசி அவிந்து சோறாகிவிடும். இது எந்தவகை அரிசி அப்பா? என எமது சம்பாஷணைக்குள் நுழைந்தான் ஐரோப்பிய நாடொன்றில் பட்டப் பின்படிப்பு படித்த எனது மகன்.

இது இயற்கையான அரிசி இல்லை. சரியாகச் சொன்னால் இது நூடுள்ஸ் அரிசி. சவ்வரிசியைப் போன்றது. நெல்லை அரிசியாக்கும் போது பெருமளவு குருணை வரும். இதை விற்க முடியாது. இதை அரைத்து பசையுள்ள சில மா வகைகளைச் சேர்த்து நூடுள்ஸ் போன்று அரிசி தயாரிக்கிறார்கள். இதிலும் பிளாஸ்டிக் சேர்ப்பதில்லை. இந்த அரிசியின் விலை இயற்கை அரிசியிலும் பல மடங்கு அதிகம். இது அவசர உலகத்தில் வாழும் சிலருக்கு அவ்வப்போது உதவலாம். ஆனால் அன்றாடம் அரிசி உணவு சாப்பிடுபவர்களுக்கு தோதுப்படாது.

சமூக வலைத் தளங்கள், இணையங்களிலெல்லாம் பிளாஸ்டிக் அரிசியினால் சமைக்கப்பட்ட சோறு எனக் காட்டி, அதனை உருண்டையாக்கி, நிலத்தில் அடித்துக் காண்பிக்கிறார்களே?

அரிசியில் இயற்கையாகவே அமைலோஸ் (இனிப்புத்தன்மை), அமைலோஸ்-பெக்ரின் (பசைத்தன்மை) என்ற இரண்டு வேதிப் பொருள்கள் உண்டு. இற்றின் அளவுக்கேற்றபடியே அரிசியின் தன்மை மாறுபடும். குச்சிகளால் சாப்பிடும் சீனர்களுக்கு பசைத் தன்மையுள்ள சோறு வேண்டும். இந்தியர்களுக்கு உதிர்ந்த சோறு வேண்டும். இதனால் ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் ஸ்டிக்கி ரைஸ் எனப்படும் இயல்பிலேயே ஒட்டும் தன்மையுடைய அரிசி வகைகள் பயிரிடப்படுகின்றன. இந்தவகை அரிசியில் அமைலோஸ்-பெக்ரின் கூடுதலாக இருப்பதால், அதன் கஞ்சியில் நெகிழ்வுத் தன்மையும் பசைத் தன்மையும் அதிகம் இருக்கும். இதனால்தான் நம்மவர்கள் இதை போஸ்டர் ஒட்டப் பாவிப்பது. இந்த வகை ஸ்டிக்கி ரைஸ்ஸை சூடாக இருக்கும் போதே இறுக்கமாக அமத்தி உருண்டையாகப் பிடித்தால் அவை உடையாத, உரமான, உருண்டையாக மாறும். பசைத் தன்மையுள்ள அரிசி மாவில் செய்யப்பட்ட பிடி கொழுக்கட்டையை நிலத்தில் எறிந்து பாருங்கள் அது உடையாதல்லவா? அது மாதிரித்தான் இதுவும்.

அது சரிதான்.

இதேவேளை நான் இன்னுமொன்றையும் சொல்லவேண்டும். இந்த மாதிரியான செய்திகளை வலைத்தளங்களில் பதிவேற்றுகையில், ஆதாரமும், உண்மைத் தன்மையும் தெரிந்தால் மட்டுமே பகிரவேண்டும். இதுகுறித்த வீடியோக்கள் பெரும்பாலும் புரியாத மொழிகளிலேயே முதலில் வெளிவந்தன. இன்றுவரையும் நிரூபிக்கப்படாத இந்தச் செய்திகள் அனைவரையும் அச்சுறுத்தும் வதந்திகளாகவே பல மொழிகளில் பரவி வருகின்றன. அறிவு பூர்வமாக நிரூபிக்கப்படாத வரையில் இதுபோன்ற செய்திகளை மக்கள் நம்பாமல் இருக்க வேண்டும் என விஷயத்தை விலாவாரியாக விளக்கினேன் நான்.

எமது உரையாடலைக் கேட்டுக்கொண்டு சமையலுக்கு தக்காளியை நறுக்கிய என்னுடைய மனைவி, ‘தம்பித்துரை அண்ணை, உங்களுக்கு சலரோகம், இரண்டு நேரமும் சோறு சாப்பிடுகிற பழக்கத்தை இனி விடுங்கோ’ என்றாள் அவர்மீதுள்ள அக்கறையில்.

நான், சலரோகக் குளிசை ஏடுக்கிறனான் பிள்ளை, எனக்கு ஒரு பிரச்சனையும் வராது என்றவர், சோத்துக் கதையை திசை திருப்ப, சாமர்த்தியமாக தக்காளி விஷயத்துக்குத் தாவினார்.

 

ஐமிச்சம் 2:

க்காளி ஏன் சுவைக்கிறது…?

தம்பித்துரை அண்ணையின் அடுத்த வீட்டில் கிறீக் நாட்டவன் வசிக்கிறான். அவன் தன்னுடைய பின் வளவில் பசுமைக் கூடம் அமைத்து தக்காளி பயிரிடுகிறான். வருஷம் முழுக்க நல்ல விளைச்சல். கடைகளுக்கும் விநியோகம் செய்கிறான். ஆனால் தம்பித்துரை அண்ணை பின் வளவில் நட்ட தக்காளி ஒரு தரம் பூத்துக் காய்த்ததுடன் தன் கடமையை முடித்துக் கொண்டது. இது பற்றி கிறீக்காரனுடன் பேசுவதற்கு தம்பித்துரை அண்ணைக்கு பாஷப் பிரச்சனை. எனவே இதன் சூக்குமம் பற்றி என்னிடம் கேட்டார்.

அண்ணை, தக்காளியில் இரண்டு வகைகள் உண்டு.

1) ‘Determinate’ தக்காளி

2) ‘Indeterminate’ தக்காளி

பெரும்பாலும் ‘Determinate’ தக்காளி இனங்களேயே நாம் ஊரில் பயிரிடுகிறோம். நீங்கள் பின்வளவில் நட்டதும் அதுதான். இவைகள் குறிப்பிட்டளவு வளர்ந்தவுடன் வளர்ச்சியை நிறுத்தி பூத்துக் காய்த்து, ஒரு வருடத்தில் செத்துவிடும். இவை அனேகமாக ஒரு விளைச்சலையே கொடுக்கும்.

ஆனால், அதிக விளைச்சலை, நீண்ட காலம் கொடுக்க நாம் பயிரிடவேண்டியது Indeterminate’ தக்காளி வகையே. கிறீக்காரன் நட்டது இந்த இனமே. இவை மூன்று வருடங்கள் வரை தொடர்ச்சியாக ஒவ்வொரு கணுக்களிலும் பூக்கள் கொத்தாத் தோன்றிக் காய்த்து பாரிய விளைச்சலைக் கொடுக்கும். பசுமைக்கூடத்தில் பயிர் செய்தால் ஆறு வருடங்கள்வரை அதிக விளைச்சலை தொடர்ந்து பெறலாம். பசுமைக் கூடத்தில் சொட்டு நீர்ப்பாசனத்தின் கீழ் பயிர் செய்வதன் மூலம் தண்ணீரைச் சேமிக்கவும் முடியும். இந்த வகை தக்காளிகளை கலட்டிப்பாங்கான நிலத்திலும் பெட்டிகளில் அல்லது சாக்குகளில் மண்ணை நிரப்பி,சொட்டு நீர்ப்பாசனத்தின் கீழ் பயிர் செய்யலாம்.

இந்த விபரம் எங்கடை நாட்டிலை ஏன் தெரியாமல் போச்சுது? இந்த விதைகளை எங்கை வாங்கலாம்? என கேள்விகளை அடுக்கினார்தம்பித்துரை அண்ணை.

விதை வியாபார ஸ்தாபனங்களை தொடர்பு கொண்டு ‘Indeterminate’ தக்காளி விதைகள் எனக் கேட்டுவாங்கலாம் என்ற என்னை இடைமறித்து, கிறீக்காரன்ரை தக்காளி சுவையாய் இருப்பதற்கு அவன் நட்ட இனம்தான் காரணமோ? எனக் கேட்டார்.

மாம்பழம் அப்பிள் போன்று தக்காளியிலும் இனத்துக்கு இனம் சுவை சற்று மாறுபடுபது இயல்பானது. அது மரபணுசார்ந்த விஷயம். ஆனால் பொதுவாகவே தக்காளி சுவைப்பதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு.

அதென்ன?

அஜினமோட்டோ’ (Ajinomoto - “Essence of Taste”).

அட, சீனாக் காரன் சாப்பாட்டிலை கலக்கிற உப்போ?

ஆம், அதுதான். இதை மொனோ சோடியம் குளுட்டாமேட் MSG (Mono sodium glutamate) எனச் சொல்வார்கள். இது தக்காளியில் ‘இயற்கையாக’ இருப்தாலேயே தக்காளி சுவைக்கிறது. இதனாலேயே உலகமெங்கும் உணவுத் தயாரிப்பில் தக்காளி முதலிடம் வகிக்கிறது. ‘அஜினமோட்டோ’ இல்லாத சைனீஸ் உணவு வகைகளே இல்லை. இதைச் சேர்க்காவிட்டால், சைனீஸ் சாப்பாடு ‘சப்’பென்று இருக்கும்.

இதுபற்றி கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுதம்பி என, ஆர்வமானார் தம்பித்துரை அண்ணை.

பண்டைய கால சீனர்களும், ஜப்பானியர்களும் தங்களின் உணவில் ஒருவித கடற்பாசியை சேர்தார்கள். அந்த கடல்பாசி புதுவித சுவையை கொடுப்பதை உணர்ந்தார்கள். இந்த கடல் பாசியில் அப்படி என்ன இருக்கின்றது? என்று 1908ம் ஆண்டு, ஆராய்ச்சியில் இறங்கினார் ஒரு ஜப்பானிய பேராசிரியர். கூடுதல் சுவைக்கு காரணம் மொனோ சோடியம் குளுட்டாமேட் என்ற வேதிப் பொருள்தான் என்பதை அறிந்தார். பின்பு அதில் அதிக ஆராய்ச்சிகள் செய்து, மொனோ சோடியம் குளுட்டாமேட்டை எப்படி கடல் பாசியில் இருந்து பிரித்து எடுப்பது என்ற இரகசியத்தை கண்டு பிடித்தார். உடனே ஒரு பணக்கார ஜப்பானிய நிறுவனம், பேராசிரியரை நண்பனாக்கி, அந்த இரகசியத்தை பெற்றுக்கொண்டது. பின்பு அதை வர்த்தக ரீதியாக தயாரித்து விற்பனை செய்தது. இந்த நிறுவனம்தான் அஜி-நோ-மோட்டோ (Aji-no-moto).

உஷாரான நிறுவனம்தான்!

மொனோ சோடியம் குளுட்டாமேட் என்ற வேதிப் பொருளை அஜி-நோ-மோட்டோ என்ற ஜப்பானிய நிறுவனம், செயற்கை முறையில் தயாரித்ததால், அதன் கம்பெனி பெயரான அஜினமோட்டோவே (Aji-no-moto) இந்த வேதிப் பொருளின் பெயராகி, பிரபலமாகி விட்டது.

நிஜமாகவா…?

உதாரணமாக, Photo copy என்றால் சிலருக்கு புரியாது. இதையே ‘ஜெராக்ஸ்’ என்று சொல்லுங்கள். புரிந்து விடும். ஜெராக்ஸ் என்பது ஒரு நிறுவனத்தின் பெயர்.

லாஜிக்கான விஷயம் தான், என்று யப்பான் காரனுக்கு பாராட்டு வழங்கிய தம்பித்துரை அண்ணை, சிட்னி பிளெமிங்டன் மாக்கற்றுக்கு மீன் வாங்கப்போன என்னுடன் இணைந்துகொண்டார்.

 

 

ஐமிச்சம் 3:

 

மீன் சந்தை, மரக்கறிச் சந்தையின் அந்தலையில் இருப்பதால்  முதலில் மரக்கறிச் சந்தைக்குள் நுழைந்தோம். அங்கு பெருமளவு மாம்பழங்கள் விற்பனைக்காக குவித்திருந்தார்கள்.

வேகமான வாழ்க்கை முறையால், தற்போது பழங்களைப் பழுக்க வைக்க வியாபாரிகள் இரசாயன முறையைக் கையாளுகின்றார்கள். இப்பழங்களை உண்பதால் வாயில் புண், வயிற்றுப் போக்கு, ஒவ்வாமை  போன்ற வியாதிகள் ஏற்பட்டு நாளடைவில் குடல் புற்று நோய் வர வாய்ப்புண்டு. இதற்குக் காரணம் காய்களைப் பழுக்க வைக்க வணிகர்களால் பயன் படுத்தப்படும் 'கல்சியம் கார்பைடு'  என்னும் இரசாயனம்.  இது புற்றுநோயை உண்டாக்கக் கூடியது என தம்பித்துரை அண்ணை எங்கோ வாசித்திருக்கிறார். இதனால் இது பற்றி வலு அக்கறையுடன் என்னிடம் கேட்டார். இவருடைய மூத்த பிரசைகள் சங்க சகா, சமீபத்தில் குடல் புற்று நோயால் இறந்தது இதற்கான மேலதிக காரணம்.

இயற்கையில் காய் பிஞ்சுகளை, முற்றச் செய்வதும் பழுக்கச் செய்வதும் எதிலீன் என்னும் வாயு நிலை ஹோர்மோனே. இது எல்லாக் காய்களிலிருந்தும் இயற்கையாக வெளியேறும். இருந்தாலும் இது அப்பிள், எலுமிச்சை மற்றும் தோடங்காய்களிலிருந்து பெருமளவில் வெளியேறுவது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஓ...!  

இதை நமது அன்றாட நடைமுறை வாழ்க்கையுடன் இணைத்துப் பார்த்து விளங்கிக் கொள்ளலாம். பெட்டிக்குள் வைக்கோல் போட்டு அடைத்து வைத்த மாங்காய்களும், நிலத்தில் தாட்டுப் புகையடித்த வாழைக் குலைகளும் விரைவில் பழுப்பதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். புகையினாலும் வைக்கோலினாலும் வெப்பம் அதிகரிக்க காய்களிலிருந்து இயற்கையாக வெளியேறும் எதிலீன் வாயு, காய்களைப் பழுக்கச் செய்யும். வெளிநாடுகளில் வாழும் நம்மவர்கள் பலர் அழகுக்காக தோடை, பேரை, அப்பிள் பழங்களை தட்டங்களில் அடுக்கி, அதன்மேல் வாழைப்பழச் சீப்பை வைத்துவிடுவார்கள். இதனால் வாழைப் பழங்கள் மேலும் கனிந்துவிடும்.

இதேபோல, ஒரு பையில் எலுமிச்சங் காய்களையும் பிஞ்சு வெண்டிக்காயையம் போட்டுக் கட்டி வைத்தால் பிஞ்சு வெண்டிக்காய் முற்றிவிடும்.  இவை அனைத்துக்கும் காரணம், காய்களில் இருந்து இயற்கையாக வெளியேறும் எதிலீன் வாயுவே எனச் சொல்லி நிறுத்தினேன்.

வசதியுள்ள நாடுகளில் வாழும் மக்கள் பெருமளவு பழங்கள் சாப்பிடுவார்கள். இவர்களது உணவில் வாழைப்பழம் முக்கியமானது. இதனால் தினம்தோறும் பல்லாயிரம் மெகாதொன் வாழைப்பழங்கள் சந்தைக்கு வரவேண்டும். இவற்றை ஒரே சீராகப் பழுக்கச் செய்ய என்ன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள் என, சம்பாசனையைத் தொடர்ந்தார்

மூடிய கூடாரங்களுள் காய்களை அடுக்கி, சந்தைப் படுத்தலுக்கு முதல்நாள் எதிலீன் வாயு செலுத்தப்படும். காய்களிலிருந்து இயற்கையாக வெளியேறும் எதிலீன் வாயு பெரும்தொகையான காய்களை விரைவில் பழுக்கச் செய்ய போதுமானதல்ல. இதனால் தேவைப்படும் பெருமளவு எதிலீன் வாயுவை எத்ரெலுடன் சுண்ணாம்பைக் கலப்பதன் மூலம் பெறப்படுகிறது. இத் தொழில் நுட்பத்தின் வேறொரு வடிவமே, கிராமங்களில் வாழைக் குலைக்கு சுண்ணாம்பு தெளித்து, வாழைச் சருகுகளால் மூடிக்கட்டிப் பழுக்க வைக்கும் முறை. செயற்கையாக தயாரிக்கப்பட்ட எதிலீன் வாயுவும் காய்களிலிருந்து இயற்கையாக வெளியேறும் எதிலீன் வாயு போன்று சௌக்கியத்துக்கு ஒருபோதும் கேடுவிளைவிப்பதில்லை.

நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லேல்லை. பழங்களைப் பழுக்கவைக்க வணிகர்களால் 'கல்சியம் கார்பைடு' எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது?

எதிலீன் வாயு தயாரிப்பற்கு ஓரளவு தொழில் நுட்பம் தேவை. இதற்குப் பணம் செலவு செய்ய சிறு வணிகர்கள் விரும்புவதில்லை. இதனால் இலங்கை இந்தியா போன்ற வளர்முக நாடுகளில் இப்பொழுது காய்களைக் கனிய வைக்க 'கல்சியம் கார்பைடு' என்னும் இரசாயனப் பொருளைப் பாவிக்கிறார்கள். இது இரும்பு ஒட்டப் பாவிப்பதால் இரும்புப் பட்டறைகளில் இதை மலிவாகப் பெற்றுக் கொள்ளலாம். இதில் ஆர்செனிக் மற்றும் பொஸ்பரஸ் போன்ற நச்சு இரசபயனங்கள் கலந்திருக்க வாய்ப்புண்டு.

ஆண்டவா...!

மாமரங்களை வணிகர்கள் மரத்துடன் தீர்த்து, வாங்குவதை அறிந்திருப்பீர்கள். இதன்மூலம் அவர்கள் விரைவாகப் பணம் சம்பாதிக்க முனையும் போது, நமக்கான பிரச்சனையும் ஆரம்பிக்கிறது. மொத்த வியாபாரிகள் பிஞ்சு, அரைமுத்தல், முத்தல் என மாங்காய்களைப் பறித்து மூடிய அறைக்குள் குவித்துவிடுவார்கள். பின்னர்  கல்சியம் கார்பைடு கற்களை பொட்டளியாகக் கட்டி மாங்காய் குவியலுக்குள் ஆங்காங்கே தாட்டு, மாங்காயக்; குவியலுக்கு தண்ணீர் தெளித்து விடுவார்கள். மாற்றாக கல்சியம் கார்பைட்டை மாவாக்கி தண்ணீரில் கலந்தும் தெளிப்பார்கள். கல்சியம் கார்பைடு நீருடன் சேரும்போது, அசற்றலீன் என்னும் வாயு வெளியேறி காய்களை கனிபோன்று தோற்றம் தரும் வகையில் நிறம் மாற்றும்.

ஓஹோ!

கல்சியம் கார்பைடும் அதிலிருந்து வெளியெறும் அசற்றலீனும் மனித சௌக்கியத்துக்கு பெரிதும் தீங்கானவை. இப் பழங்களைச் சாப்பிட்டால் அடிக்கடி வயிற்றுப் போக்கு, வயிறு மந்தம், சருமப் பிரச்னைகள், அல்சர் போன்ற பாதிப்புகள் உண்டாகும். கால்சியம் கார்பைடு கலந்த உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் உண்டாகும்.

பழங்கள் இயற்கையாகப் பழுத்தவையா அல்லது செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்டவையா என்று எப்படிக் கண்டறிவது?

·         செயற்கையாக பழுத்த பழங்கள் பளபளப்பாக மெல்லிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். காம்புப் பகுதியை கீறிமணந்தால் புளிப்புத் தன்மைக்கான மணம் வீசும்.

·         இயற்கையாகப் பழுத்த பழம் கொஞ்சம் மெதுமையாக இருக்கும். ஆனால், செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்ட பழங்கள் திடமாகவும் கனமாகவும் இருக்கும்.

 

·         கல்சியம் கார்பைடு மூலமாகப் பழுக்கும் பழங்கள் முறையான வடிவத்தில் பழுக்காமல் திட்டு திட்டாக, பழுத்த தோற்றத்தில் நிறம் மாறி இருக்கும். வெட்டிப்பார்த்தால் உள்ளே மினுமினுப்பாக இருக்கும்.

 

 

·         பழத்தில் குறிப்பிட்ட ஓரிடத்தில் மட்டும் தீப்பட்டதுபோல கறுப்பாக இருந்தால், அது கண்டிப்பாக கார்பைடு கல்லால் பழுக்க வைக்கப்பட்டது. முக்கியமாக பழங்களை உண்டபின் வாயில் அரிப்பெடுத்தால் அந்தப் பழங்களை தொடர்ந்து உண்ணக்கூடாது.

இப்படிப் பேசியவாறு மீன் மாக்கட்டுக்கு வந்துசேர்ந்தோம்.

 

 

ஐமிச்சம் 4:

வால் துண்டா, நடுத்துண்டா?

வால் துண்டு என்றார் மகள்.

நடுத்துண்டு வாங்கு பிள்ளை, அதுதான் நல்லதென்றார் அம்மா.

சிட்னியில் உள்ள மீன் சந்தையில் நாங்கள் கேட்ட உரையாடல் இது!

ஸ்பனிஸ் மக்கரல் (Spanish Mackerel) குழம்பு வைக்க, பொரிக்க சோக்கான மீன். இதை இந்தியாவில் வஞ்சிரம் என்பார்கள். இலங்கையில் Seer fish என்பார்கள். இதை துன்டு துன்டாக வெட்டி பிளமிங்டன் மீன் சந்தையில் அன்று விற்பனைக்கு வைத்திருந்தார்கள்.

வால் துண்டா, நடுத்துண்டா? யார் சொன்னது சரி? தாயா, மகளா?

மீன் கடையில், தாய்க்கும் மகளுக்கும் நடந்த சம்பாஷணையில், நானும் நுழைந்தேன். ஏனென்றால் இதில் அறிவியல் விஷயமொன்றும் அடங்கியிருக்கிறது.

ஏன் வால்த்துண்டு வேண்டாம்’ எனக் கேட்டேன்.

வால்த் துண்டு குழம்பில் அவிந்து, எண்ணெய்யில் பொரிந்து ‘வலியன்’ பத்திவிடும், என்றார், அம்மா.

அவர் சொன்னது உண்மைதான்!

மீன் நீந்தும் போது தொடர்ச்சியாக வாலை ஆட்டும். இதனால் வால்த் தசை இறுக்கமடைவதுடன் வாலில் அதிகளவு கிமோகுளோபின் கலந்த கறுப்புத் திண்மம் படிந்திருக்கும். இது வாலுக்குத் தேவையான மேலதிக ஒக்சிசனைப் பெற்றுக் கொடுப்பதில் பங்கேற்கும். ஆனால் நடுப்பகுதித் தசைக்கு அதிக வேலை இல்லை. இதனால், இது மென்மையாகவும் ருசியாகவும் இருக்கும். இதுதான் அந்த அம்மா நடுத்துண்டை விரும்பியதற்கான காரணம்.

நடுத்துண்டில், குடல் இருந்த பகுதி ஓட்டையாக இருக்குமே? எனக் கேட்டதற்கு, மீனை ‘ஊடுவிட்டு’ வெட்டவேணும் என புது தகவல் ஒன்றைச் சொன்ன அம்மா, மகள் அவசரப்பபடுத்த, எனக்கு விளக்கம் சொல்லாமலே மரக்கறிக் கடைக்கு சென்றுவிட்டார்.

அதென்ன ஊடுவிட்டு வெட்டிறது? தம்பித்துரை அண்ணையிடம் இதுபற்றிக் கேட்டேன்.

அதுதான் யாழ்ப்பாணப் பொருளாதாரத்தின் சூக்குமம். யாழ்ப்பாணத்திலை பெருமளவு கிடைக்கும் திரளி, விளை, பாரை மீன்களை வாங்கினால் அதிலை மூண்டில் ஒண்டு தலை. மிச்சத்திலை நாலைஞ்சு பிள்ளையள் உள்ள வீட்டிலை, சரிசமமாய் துண்டுகள் வெட்டிற ரெக்னிக்தான் ஊடுவிட்டு வெட்டிறது.

அதைக் கொஞ்சம் விளக்கமாய் சொல்லுங்கோ அண்ணை.

மீனை வெட்டும்போது, குறுக்கே வெட்டின மீன் துண்டுகளை நடுவிலை வெட்டினால்தான் கனக்க துண்டுகள் பொலியும். இவற்றை நடுவிலை வெட்டி இரண்டு துண்டாக்கும்போது நடு (ஊடு) முள்ளுக்கு அப்பால், தசை இருந்த பக்கமாக (குடல் இருந்த பக்கம் அல்ல) வெட்டி இரண்டாக்க வேணுமடாதம்பி. அப்பதான் குடல்பக்கத் துண்டும் ‘ஒறுவாய்’ இல்லாத, முழுத்துண்டாக வரும், என மேலும் விளக்கம் தந்த தம்பித்துரை அண்ணை, இன்னுமொரு கொசுறுச் செய்தியையும் சொன்னார். பரவைக்கடலில் (ஆழமில்லாத கடல்) அலைகள் குறைவு. இங்குள்ள மீன்கள் வாலை அதிகம் ஆட்டி நீந்தத் தேவையில்லை. இதனால் இங்கு பிடிக்கப்படும் மீன்களின் தசை மென்மையானவை. யாழ்ப்பாணத்தார் பரவைக் கடல் மீனை விரும்புவதற்கும் இதுவே காரணம் என்றவர் மருமகனுக்கு நண்டுக்கறி விருப்பமென, பெண் நண்டுகளாகப் பெறுக்கி எடுத்து வாங்கினார்.

பெண் நண்டில்தான் அதிக சதையும் சினையும் இருக்குமென்ற மேலதிக தகவலையும் சொன்னார். எனக்கோ இது புதுத் தகவல்.

எப்படி அண்ணை நண்டிலை ஆண் பெண் பாக்கிறது? எனக் கேட்டேன்.

நண்டை வயிற்றுப் பக்கமாகத் திருப்பினார். வயிற்றுப்பக்க ஓட்டின் அடிப்பகுதியில (கீழ் பகுதியில்) முக்கோண அமைப்பில் ஒரு ஓடு (Flap) இருந்தது. அந்த முக்கோண அமைப்பு, அகலமாக இருந்தால் பெண் நண்டு, கூராக, நீண்டு இருந்தால் அது ஆண் நண்டு என விளக்கினார் தம்பித்துரை அண்ணை.

இப்படி அன்றாட வாழ்வில் நாம் அறிந்து கொள்ளவேண்டிய எத்தனை விஷயங்கள் இருக்கின்றன என வியந்தபடி நானும் சில பெண் நண்டுகளை தெரிந்தெடுத்து வாங்கினேன்.

 

ஐமிச்சம் 5:

றவைகள் சிறுநீர் கழிக்குமா?

தம்பித்துரை அண்ணையும் நானும் மீன்கடையில் மினைக்கெட தம்பித்துரை அண்ணையின் பேரன் கோழிக்கடை அருகே தனது ஐ-பாட்டை நோண்டிக்கொண்டிருந்தான். கோழிக் கடைக்காரர் கோழிக் கூண்டுகளுக்கு வெளியே விழுந்திருந்த கோழி எச்சங்களை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார். எச்சங்களை அப்படியே விட்டால் ஆஸ்திரேலியாவில் பாரிய அபராதம் விதிக்கப்படுமென்பது வியாபாரிகளுக்குத் தெரியும். இதனால் மீன்கடை, கோழிக்கடை, இறைச்சிக்கடை, மரக்கறிக்கடை என சந்தையில் எல்லாக் கடைகளையும் வியாபாரிகள் சுத்தமாக வைத்திருப்பார்கள்.

மீன் கடையிலிருந்து நாங்கள் வெளியே வந்தோம். தம்பித்துரை அண்ணையின் பேரன் என்ன நினைத்தானோ? திடீரென ஐ-பாட் நோண்டுவதை நிறுத்தி அங்கிள், எனக்குமொரு ஐமிச்சம் என்றான்.

உனக்குமா? கேள் என்றேன்.

கோழி சிறுநீர் கழிக்குமா?

அவனது கேள்வியைக் கேட்ட எனக்கு முதலில் சிரிப்பு வந்தாலும் அவன் புத்திசாலி மாணாக்கர்களுக்காக நடத்தப்படும் சிட்னிப் பாடசாலை ஒன்றில் பத்தாம்வகுப்பு படிப்பதால், அறிவியல் தகவல்கள் கலந்து சற்று விபரமாக பதில் சொல்லத் துவங்கினேன்.

கோழி மட்டுமல்ல எல்லா பறவைகளும் சிறுநீர் கழிக்கும். பறவைகளுக்கும் சிறுநீரகம் உண்டு. சிறுநீரில் உள்ள நீர் பறவைகளில் மீண்டும் உடலுக்குள் உறுஞ்சப்படுவதால், சிறுநீர்க் கழிவு திண்மமாகவே வெளியேறும்.

நிஜமாகவா? என விழிகளை விழித்து விபரம் அறிவதில் மேலும் ஆர்வமானான் பேரன்.

பறவைகளில் மலவாசல் என்று நாம் கருதுவது, ‘புணர்ச்சிக் கழிவுப் பொதுவாய்’ (Cloaca) எனப்படுவதையே. இதனூடாகத் தான் புணர்ச்சியும், கழிவும், முட்டையும் வெளியேறும். சிறுநீர்க் குழாயும், பெருங்குடலும் புணர்ச்சிக் கழிவுப் பொதுவாய்க்குள்ளேயே முடிவடையும். இதனால்தான், கோழி இட்ட முட்டையில் கோழி எச்சம் பிரண்டிருப்பதை வைத்து, முட்டை உணவுக் குழாயூடாக (குடல்) வந்து மலவாசலூடாக வெளியேறுவதாக நாம் தவறாக எண்ணுவதுண்டு.

ஓ…!

புணர்ச்சி கழிவு பொதுவாயின் உட்பகுதியில் மிகச் சிறிய ஆண், பெண் பால் உறுப்புக்கள் இருக்கும். கோழியில் ஆண்குறி, புணர்ச்சிக் கழிவுப் பொதுவாய்க்குள், சாதாரண நிலையில் சுருண்டிருக்கும். இதனால்தான் சேவல், பேட்டுக்கோழியை மிதிக்கும்போது வாலைப் பதித்து, பேட்டின் செண்டைப்பூவை கொத்தி இழுப்பது. இது பேட்டுக் கோழிக்கு சேவலால் விடப்படும் Signal. ஆனால் வாத்துக்களில் அப்படியல்ல. வாத்தில் ஆண்குறி புணர்ச்சிக் கழிவு பொதுவாய்க்கு வெளியே சற்று நீண்டு துலக்கமாக இருக்கும்.

எனது விளக்கத்தை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த தம்பித்துரை அண்ணர், சுருக்கமாகச் சொன்னால், முட்டை, சிறுநீர், மலம் ஆகியன வெளியேறலும், புணர்ச்சியும், பறவைகளில் நாம் ‘மலவாசல்’ என்று கருதும், ‘புணர்ச்சிக் கழிவுப் பொதுவாய்’ ஊடாகவே நடைபெறும் எனச் சொல்லி, கோழி விஷயத்துக்கு சுபம் போட்டார்.

கார் நிப்பாட்டிய இடத்துக்கு போகும் வழியில் பிஜி நாட்டுப் பெண் ஒருவர், மண் ஈரம் காயாத நல்ல மரவெள்ளிக் கிழங்குகளை விற்றுக்கொண்டிருந்தார். ஆசையை அடக்கமுடியாமல் தாராளமாவே தம்பித்துரை அண்ணையும் நானும் வாங்கினோம். வீடு திரும்பும் வழியில் தம்பித்துரை அண்ணை என்னைக் கேட்பார் என நான் முன்னரே எதிர்பார்த்திருந்த கேள்வியைக் கேட்டார்.

 

ஐமிச்சம் 6:

 

ரவெள்ளிக் கிழங்கும் இஞ்சியும் நஞ்சா? அல்லது கட்டுக் கதையா?

காருக்குள் இருந்த பேரனுக்காக இந்தக் கேள்விக்கு சற்று விபரமாகவே பதில் சொன்னேன். மரவள்ளிக் கிழங்கின் தோலில் Cyanogenic glycosides என்ற பதார்த்தம் உண்டு. நாட்பட்ட கிழங்கின் தோலிலிருந்து இந்தப் பதார்த்தம் அதிக அளவு கிழங்கினுள் செல்வதால்தான் கிழங்கில் கடும் நீல நிறம் ஏற்படுகின்றது. இது இஞ்சியிலுள்ள நொதியத்துடன் தாக்கமடைந்து சயனைட்டை உருவாக்குவதால் உடலுக்குக் கேடு விளையும் என்றும் ஆராய்ச்சித் தகவல்கள் சொல்கின்றன.

அப்படியா? என சற்று உஷாரானான் பேரன்.

நீல நிறம் ஏற்பட்ட கிழங்குகளைத் தவிர்த்தல். ஆவி வெளியேறும் வகையில் திறந்து வைத்து அவித்தல், அவிக்கும்போது மஞ்சள் சேர்த்துக்கொள்ளல் போன்ற நடவடிக்கைள் நச்சுத் தன்மையை தவிர்க்கும் வழிமுறைகள். நாட்பட்ட மரவள்ளிக் கிழங்கின் தோலிலிருந்து வரும் வாசம் Potassium cyanideஇன் மணத்தை நினைவுபடுத்துவதாகவே உள்ளது. ஆனால் புதிதாகப் பிடுங்கி எடுக்கப்பட்ட கிழங்கில் இந்த ஆபத்து ஏற்படும் வாய்ப்பு மிகக் குறைவென்றே நினைக்கின்றேன் என விளக்கினேன் நான்.

உண்மைதானடா தம்பி, ஊரிலை நான் வளர்த்த ஆட்டுக்கிடாய், வாடின மரவள்ளி இலை சாப்பிட்டுத்தான் செத்தது என, எப்போதோ அவர் வளர்த்த ஆட்டுக்கடாவை நினைத்து ஆதங்கப்பட்டார் தம்பித்துரை அண்ணை.

இதேவேளை ஐபாட்டை நோண்டிக்கொண்டிருந்த பேரன், உங்களுக்கு இந்த விஷயம் தெரியுமா அங்கிள்? என இணையத்தில் தான் அறிந்த தகவல் ஒன்றைக் காட்டினான்.

மரவள்ளிக் கிழங்கிலிருக்கும் Cyanogenic glycosides என்னும் வேதிப் பொருள் காரணமாக மரவள்ளிக் கிழங்கு பயிரிடுவதும் உண்பதும் யப்பான் நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ளதாக இணையச் செய்தி தெரிவித்தது.

இப்படியாக பல ஐமிச்சங்களுக்கு விடை தெரிந்த திருப்தியில், ‘பின்னேரம் தேங்காய்பால் விட்டு அவித்த மரவெள்ளிக் கிழங்கு கொண்டுவாறன், சாப்பிட்டுப் பார் எனச் சொல்லி தம்பித்துரை அண்ணைர் விடைபெற்றார்.

 

ஆசி கந்தராஜா (2017)

 

No comments:

Post a Comment