Monday 10 July 2023

 

சீன நாட்டு நண்பரும் எருமை மாட்டுப் புல்லும்!

அன்று சனிக்கிழமை!

சிட்னியிலுள்ள பிளெமிங்டன் என்ற இடத்தில், மிகப் பெரிய சந்தை கூடும் நாள்.

அன்று பல்லின மக்களுக்குத் தேவையான மரக்கறிகள் தொடக்கம் மீன், இறைச்சி வகைகள் வரை அங்கு பிறெஸ்ஸாகவும் மலிவாகவும் சில்லறையாகவும் வாங்கலாம். முதல்முறை பிளெமிங்டன் சந்தைக்குப் போகின்றவர்களுக்கு நிச்சயம் அது ஒரு புதுவகையான அனுபவம். அங்கு வரும் ஆங்கிலோ ஆஸ்திரேலியர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். சந்தைக்கு வருபவர்களுள் பெரும்பான்மையோர் புலம் பெயர்ந்த பல்லின மக்களே.

இங்கு எமக்கு இன்னொரு வசதியுமுண்டு. உடன் பிறப்புக்களான ‘எங்கட பெடியங்கள்’ இங்குள்ள மீன் கடைகளில் வேலை செய்கிறார்கள். இதனால் பாரை, ஒட்டி, சீலா, விளை, திரளி என மீன்களின் தமிழ்ப் பெயரைச் சொல்லி வாங்கவும், பேரம் பேசவும், குழம்புக்கு ஏற்றமாதிரி ‘யாழ்ப்பாண வெட்டு’ என்று மீனை வெட்டி வாங்கவும் முடியும். அலுவல் முடிந்து திரும்பியதும் ‘உவங்கள் இப்ப படகிலை வந்த பெடியள், கொஞ்சம் கவனமாய் இருக்கவேணும்’ என கொமன்ற் அடிப்பதையும் மீன் கடைகளுக்கு அருகில் சர்வ சாதாரணமாக கேட்க முடியும்.

சனிக்கிழமை அதிகாலை ஐந்து மணிக்கு துவங்கும் பிளமிங்டன் விவசாயிகளின் சந்தை, பகல் இரண்டு மணிக்கு முடிவடையும். வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் சிறிய அளவில் சந்தை கூடுவதுண்டு. தமிழ் மகா ஜனங்கள் பெரும்பாலும் சந்தை கலையும் நேரத்தில்தான் சாமான் வாங்கப் போவார்கள். இதற்கான காரணத்தை நான் இங்கு சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை...

 

வெடுக்குப் பத்தன்

த்தன் என்கிற பத்மநாதனை சமீபத்தில் சந்தித்தேன். அவன், ஆயிரத்து தொழாயிரத்து அறுபதாம் ஆண்டுகளின் பிற்பகுதியில் என்னுடன் ஒரே வகுப்பில் படித்தவன். எங்கள் வகுப்பில் அப்பொழுது இரண்டு பத்மநாதன் இருந்தார்கள். ஒருவன் நெடுவல். அதனால் அவன் நெடுவல் பத்தன். மற்றவன் வெடுக்குப் பத்தன். அவனில் வேர்வை நாத்தம் அடிப்பதால் இந்தப் பெயர் அவனுடன் ஒட்டிக் கொண்டது. நாங்கள் இருவரும் கல்லூரி விடுதியில் ஒன்றாக இருந்து படித்தோம். அதுவும் ஒரே Dormitory, பக்கத்து, பக்கத்துக் கட்டில்!

வெடுக்குப் பத்தன் ஊத்தையன் அல்ல. அவனுடைய உடம்பிலிருந்து ஒருவகை நாத்தம் வீசுவது அவனுக்கும் தெரியும். சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம், யுனானி வைத்தியம், ஹோமியோபதி, அலோபதி (ஆங்கில வைத்தியம்) என அவன் செய்யாத வைத்தியங்கள் இல்லை. எல்லா வைத்தியர்களும் முடிவாகச் சொன்னது இதுதான்! அவனது உடம்பில் அதிக ரோமங்கள் இருப்பதாகவும் அதனால் சருமத் துளைகள் வழியாக அதிக வியர்வை வெளியேறுவதாகவும், அடிக்கடி குளித்துச் சுத்தமாக இருப்பதே இதற்கான பரிகாரம் என்றார்கள். இதனால் விடுதியில் அவன் மூன்று நேரமும் குளித்தான். வாரம் முழுவதும் நாங்கள் ஒரு ஷேட் போடுவோம். சில வேளைகளில் நண்பர்களிடம் கடன் வாங்கியும் அணிந்து கொள்வோம். ஆனால் பத்தன் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு ஷேட், தோய்த்து அயன்பண்ணிப் போடுவான். இருந்தாலும் அந்த மணம் அவனைவிட்டுப் போகவே இல்லை.

கால ஓட்டத்தில் பல்கலைக்கழக புகுமுக வகுப்புச் சோதனை முடிந்ததும் நாங்கள் அனைவரும் ஒவ்வொரு திக்காக சிதறிப் போனோம்.

 

பூக்களே, காதல் செய்யுங்கள்...!

 

செல்லத்துரை அண்ணைக்கு 'ஹெளஸிங் கொமிஷன்' வீடு கிடைத்து விட்டது...! அதுதான் அன்றைய மூத்தோர் ஒன்றுகூடலில், முக்கிய 'பேசு'பொருள்.

செல்லத்துரை அண்ணை சிட்னிக்கு புலம் பெயர்ந்து வந்து இரண்டு வருடங்கள்தான் ஆகிறது. அதற்குள் எப்படி ‘ஹெளஸிங் கொமிஷன்’ வீடு கிடைத்தது? என மூத்தவர்கள் மூக்கில் விரலை வைத்தார்கள். சிலருக்கு இது ஆச்சரியம், பலருக்கோ பெரும் ஆதங்கம். மொத்தத்தில் எல்லோருடைய வயிறும் இதனால் புகைந்தது.

பெற்றோர் பிள்ளைகள் இணைப்பு விசாவில் ஆஸ்திரேலியா வருபவர்களுக்கு 104 கிழமைகளின் பின்னர்,  'சென்றலிங்' பென்ஷன் கிடைக்கும். இது தானாகவே நடக்கும் சங்கதி. ஆனால் பென்ஷனுடன் செல்லத்துரை அண்ணைக்கு ‘ஹெளஸிங் கொமிஷன்’ வீடும் கிடைத்ததைத்தான், பலராலும் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

செல்லத்துரை அண்ணை, ஊரிலேயே வலு சுழியன். கமத்தொழில் சங்கம், கிராம அபிவிருத்தி சங்கம், சனசமூக நிவையம் என, அவர் வன்னியில் ஆதிக்கம் செலுத்தாத அமைப்புக்கள் இல்லை. அந்த அநுபவம் ஆஸ்திரேலியாவிலும் கைகொடுத்ததால் பிடிக்கிறவனை பிடித்து சட்டத்திலுள்ள ஓட்டைகளில் புகுந்து விழையாடி, அரசாங்கத்துக்கு சொந்தமான ‘ஹெளஸிங் கொமிஷன்’ வீட்டைப் பெற்றுவிட்டார். அதுவும் விசாலமான காணியுடன் ஒரு தனி வீடு!

இரு வாரங்களுக்கு ஒருமுறை, செல்லத்துரை அண்ணைக்கும், மனைவி தங்கம்மா அக்காவுக்கும் 1322 டொலர்கள் பென்சன் கிடைக்கிறது. அதில் மிகச் சொற்ப தொகையையே வீட்டு வாடகை. குறைந்த கட்டணத்தில் நாள் முழுவதும் றெயினிலும், பஸ்ஸிலும் சுற்றித் திரிய மேலதிக வசதி. பிறகென்ன? ராஜ வாழ்க்கைதான்!

 

தம்பித்துரை அண்ணையும் பேரனும் ஆறு ஐமிச்சங்களும்!

 

ரக்கப்பரக்க எனது வீட்டுக்கு பேரனுடன் வந்தார் தம்பித்துரை அண்ணை. அவர் எனது வீட்டிலிருந்து பத்து நிமிஷ நடைதூரத்திலுள்ள மகளின் வீட்டில் வசிக்கிறார். ஊரில் மட்டுமல்ல சிட்னியிலும் அவரை தமிழரசு தம்பித்துரை என்றால்தான் தெரியும். அந்த அளவுக்கு இருபதாம் நூற்றாண்டின் அறுபது எழுபதுகளில் தமிழரசுக் கட்சிக்காகவே உயிரைக் கொடுத்து உழைத்தவர். இதனால் இன்றும் அரசியல் மற்றும் உலக நடப்புக்கள் அனைத்தையும் ஆதியோடந்தமாக அறிந்து வைத்திருப்பார். தம்பித்துரை அண்ணை இலங்கையில் அரச விசாயப் பண்ணை ஒன்றை தனி ஆளாக நின்று திறம்பட நிர்வகித்தவர். அவரின் அரசியல் நிலைப்பாடு காரணமாக சிங்கள மேலதிகாரியுடன் முரண்பட்டு அரசாங்க வேலையைத் தூக்கி எறிந்தபின், ஊரில் பல விவசாயப் புரட்சிகள் செய்தவர். சுற்றி வளைத்துப் பார்த்தால் அவர் எனக்கு உறவும்கூட. அந்த பந்தமும் பாசமும் சிட்னியிலும் தொடர்வதினால் தனது அறிவெல்லைக்கு அப்பாற்பட்ட ஐமிச்சங்களைத் தெளிவுபடுத்துவதற்கு அவர் என்னிடம் வருவார். அந்த வகையில், இன்றும் தம்பித்துரை அண்ணைக்கு பல ஐமிச்சங்கள். உள்ளதைச் சொன்னால் பயம் கலந்த ஐமிச்சம். அதுவும் அவர் அன்றாடம் இரண்டு வேளை சாப்பிடும் சோறு பற்றிய ஐமிச்சம்.

 

ஐமிச்சம் 1:

 

என்.பி.கே…!

ந்த சுற்று வட்டாரத்தில் உடையார் வளவைத் தெரியாதவர்கள் இல்லை. அந்த அளவுக்கு வன்னி நிலப்பரப்பில் பிரபல்யமான குடும்பம் அது. மாங்குளத்தில் அவர்களுக்கு ஏராளமான நெல் வயல்கள் சொந்தமாக இருந்தன. இதற்கான நதி மூலத்தை பொன்னையா வாத்தியார் ஒரு சந்தர்ப்பத்தில் சொன்னார். இலங்கையை ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில் முடிக்குரிய காணிகளை முறைப்படி பதிவு செய்ய, உடையார் என்னும் பதவியை உருவாக்கினார்களாம். இவர்கள் ஊரிலுள்ள அரச காணிகளை ஆவணப்படுத்தும் போது, பத்தோடு பதினொன்றாக சில காணிகளை தங்களுடைய பெயர்களிலும் பதிவு செய்தார்களாம். இதனால் இவர்கள் பெருந் தொகையான காணி பூமிகளுக்குச் சொந்தக் காரர்களாகி நிலச் சுவாந்தர்களானார்கள்.

உடையாரின் பேரன் ஐயாத்துரை என்னுடன் யாழ்ப்பாணப் பாடசாலை ஒன்றில் ஒன்றாகப் படித்தவன். நல்ல நண்பன். உடையார் குடும்பத்தின் ஒரே ஆண்வாரிசு. இதனால் குடும்பச் சொத்தைப் பாதுகாக்கவென, பன்னிரண்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டான். பின்னர் ஊர்ப் பாடசாலை ஒன்றில் மாணவ ஆசிரியராகி கால ஓட்டத்தில் பயிற்றப்பட்ட ஆசிரியராகிவிட்டான். ஐயாத்துரையின் வீட்டில் எந்த நேரமும் உலை கொதிக்கும், அடுப்பில் ஏதோ ஒருவகை இறைச்சி அவியும். வந்தவர்கள் அங்கு கை நனைக்காமல் போவதில்லை. அவ்வப்போது நானும் குடும்பத்துடன் அவனுடைய வீட்டுக்குப் போய் விடுமுறையைக் கழிப்பதுண்டு. அவை மிகவும் மகிழ்ச்சியான நாள்கள்.

ஈழப் போராட்டம் துவங்கி, வன்னியில் போர் உக்கிரமான காலமது!

Tuesday 2 February 2021

 

புனைவுக்கட்டுரைகளின் முகவுரைகள்.


1. கறுத்தக் கொழும்பான்

  • ஜெயமோகன்

2. செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய்.

  • வாசந்தி
  • வ. மகேஸ்வரன்
  • தி. ஞனசேகரன்


1. கறுத்தக் கொழும்பான்ஜெயமோகன்.


பயணியின் புன்னகை: 

ஆசி கந்தராஜாவின் கறுத்தக் கொழும்பான் நூல் பற்றி ஜெயமோகன்….

 

பயணியின் புன்னகை: ஆசி கந்தராஜாவின் கறுத்தக் கொழும்பான் நூல் பற்றி ஜெயமோகன்….

 

ங்களூரில் அந்தக் காலத்தில் பட்டாளத்துக் காரர்கள் தான் உலகச் சாளரங்கள். வடசேரி கனகமூலம் சந்தைக்கு காய்கறி வாங்கச்செல்வது, சுசீந்திரம் தேர்த்திருவிழா, திருவந்தபுரம் பத்மநாபசாமி ஆறாட்டுவிழாவுக்குச் செல்வது தவிர எங்களூரில் பயணம் மேற்கொள்பவர்கள் அரிது. பெரும்பாலானவர்கள் ‘என்ன சாமி சொல்லுகது? குளித்துறைக்கு அப்புறம் ராச்சியமில்லை. தேங்காப்பட்டினம் கடலாக்கும் ’ என நம்புகிறவர்கள்

அப்படிப்பட்ட சூழலில் இரும்பு லாடம் கட்டிய சப்பாத்துகளும் பச்சைக்கம்பிளிச் சீருடையும் டிரங்குப்பெட்டியுமாக வரும் பட்டாளத்துக்காரர்கள் அச்சமும் ஆர்வமும் ஊட்டும் அபூர்வப்பிறவிகள். அவர்களில் சிலர் லடாக் வரைக்கும் சென்றவர்கள். பனிமலைகளையும் பாலைவனங்களையும் கங்கையையும் பிரம்மபுத்திராவையும் பார்த்தவர்கள். ரேஷன் வந்துசேராமல் பன்னிரண்டு நாள்வரை பட்டினி கிடந்தவர்கள். படுகாயம்பட்ட காலுடன் நூறு கிலோமீட்டர் நடந்தவர்கள். பட்டாளத்தான் வந்துவிட்டால் ஊரே சுற்றிலும் திரண்டுவிடும்.

Saturday 30 January 2021

 


செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய்…!

ஆசி கந்தராஜா

-1-

செல்லப்பாக்கியம் மாமி என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது, மட்டுவில் முட்டிக் கத்தரிக்காய்! இது பால் வெள்ளை நிறத்தில் உருண்டுதிரண்டு முட்டிவடிவில் மினுமினுப்பாக இருக்கும்.

செல்லப்பாக்கியம் மாமி மட்டுவில் என்னும் கிராமத்தில் பிறந்து, அங்கேயே பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியருக்கு வாழ்க்கைப் பட்டவர்.

அவர் பிறந்ததும் வாழ்க்கைப் பட்டதும் மேட்டுக் குடி. இதனால், சிட்னிக்கு புலம் பெயர்ந்த பின்பும் அந்த ‘மிடுக்கு’ சற்றும் குறையாமல் மகள் குடும்பத்துடன் வாழ்ந்தார். சுற்றி வளைத்து எப்படியோ என்னுடைய மனைவியின் பாட்டன், சிங்கப்பூர் பென்சனியர், தனக்குச் சொந்தமெனச் சொல்லிக்கொண்டு எமது வீட்டுக்கும் அடிக்கடி வந்துபோவார். சரிகைக்கரை வைத்த நூல்சேலை கட்டி, தங்கச்சங்கிலி கோத்த மூக்குக் கண்ணாடியுடன் மிடுக்காக வலம் வரும் அவரை, எல்லோரும் மாமி என்றே அழைத்தார்கள். அதனால் எனக்கும் அவர் மாமியானார். அடிமட்டத்திலிருந்து நான் மேலே வந்தவன் என்பதும், அவரது பருப்பு என்னில் வேகாது என்பதும் அவருக்கு நன்கு தெரியும். இதனால் மாமியின் வடிகால் பெரும்பாலும் என்னுடைய மனைவியே!

 கறுத்தக் கொழும்பான்

ஆசி கந்தராஜா

 -1-

டையார் மாமா மகா விண்ணன். அவரைச் சந்திப்பது எப்போதும் எனக்கு மகிழ்ச்சி தரும். அவரைப்போன்று ‘அச்சொட்டாக’ விவசாயம் சம்பந்தப்பட்ட சங்கதிகளைப் பேச நான் வேறு ஆளைக் கண்டதில்லை.

மாமா ஊரில் வாழ்ந்த காலத்தில் வயல் தோட்டம் துரவு என வசதியாக வாழ்ந்தவர். ‘அரைவாசி ஊரே அவருக்குச் சொந்தமாக இருந்தது’ என்று விண்ணாணம் பேசுபவர்கள் சொல்வார்கள். எப்படி இது சாத்தியமானதென ஒரு தடவை பாட்டியைக் கேட்டேன். இங்கிலீசுக்காரர் இலங்கையை ஆண்ட காலத்தில் தமது ஆட்சி அதிகாரத்தை இலகுவாக்க, மணியகாரன், உடையார், விதானையார் என்ற பதவிகளை உருவாக்கியதாகவும், பதவிக்கு வந்தவர்கள் தமது ஆட்சி அதிகாரங்களைப் பாவித்து ஊரில் உள்ள ‘அடுகாணி-படுகாணிகளை’ தம் வசமாக்கியதாகவும் பாட்டி சொன்னார். உடையார் மாமா வீடு கட்டியிருக்கும் ‘நாவலடி வளவு’ எங்கள் பாட்டனாருக்குச் சொந்தமானதென்று அம்மா சொல்லி வருத்தப்பட்டார்.

 சாத்தானின் விரல்கள்

ஆசி கந்தராஜா

-1-

டந்த இருபது வருடங்களாக, சிட்னியில் வசிக்கும் என்னுடய அம்மாவுக்கு வயது தொண்ணூறு. இந்த வயதிலும் அவருக்கு நோயற்ற திடகாத்திரமான உடம்பு!

அவரின் முப்பத்திரண்டு பற்களும் ஒறிஜினல். சூத்தையோ, ஆட்டமோ அற்ற பால் வெள்ளைப் பற்கள் அவை.

பல்வைத்தியரான என்னுடய மகன், அப்பாச்சியின் பற்களை வெவ்வேறு கோணங்களில் படம் பிடித்து, பல்வைத்திய மாநாட்டு விரிவுரைகளில் காட்டிப் பெருமைப்படுவான்.

நல்ல காலம்! ஆஸ்ரேலியர்களுக்கு அப்பாச்சியின் பற்கள் இல்லை. அப்பாச்சி போல, இங்கே பிறந்தவர்களும் இருந்தால், நான் கிளினிக்கை இழுத்து மூடவேண்டும்’ என பேத்தியாருக்கு ‘கொமன்ற் அடிப்பான் பேரன்.

யாழ்ப்பாணத்து தண்ணியும், கைதடி முருங்கைக் காயும்தான், தனது உறுதியான பற்களுக்குக் காரணம் என்பது அம்மாவின் அசைக்க முடியாத நம்பிக்கை. முருங்கைக்காய் சமாசாரம்பற்றி பேச்சு வரும்போதெல்லாம் கைதடி முருங்கைக் காய்தான் திறமென அடம் பிடிப்பார். கைதடி, ஒரு கலட்டிப் பாங்கான பூமி. அங்கு எது வளருதோ இல்லையோ, முருங்கை மரங்கள் நன்கு வளர்ந்தன. எங்கள் கைதடி வளவிலும் அம்மா பலவகை முருங்கை மரங்களை நட்டிருந்தார். களிமுருங்கை, வலியன் முருங்கை, கட்டை முருங்கை, உலாந்தா முருங்கை என அம்மாவின் பாஷையில் அவற்றிற்கு வெவ்வேறு பெயர்கள்.

வரகு மான்மியம்

ஆசி கந்தராஜா

-1-

கோயில் குருக்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டதாக மனைவி சொன்னாள்.

கோயில் கும்பாபிஷேகத்துக்கு வரகு வேணுமாம்!

வரகுக்கு, இங்கிலிசிலை என்ன பெயர்? எனவும் ஐயர் கேட்டவர். கோயில் விஷயமப்பா, சாட்டுச் சொல்லித் தப்பாமல் எடுத்துக் குடுங்கோ…’

மனைவியின் குரலில் கட்டளையின் தொனி இருந்தது. கோயில் குத்தம், குடும்பத்துக்கு கேடு வரும் என்ற பயம் அவளுக்கு.

விவசாயப் பேராசிரியரான ஒருவர், வரகு எங்கே கிடைக்கும்…? என்ற தகவல் உட்பட, விவசாயம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் சகலகலா வல்லவனாக இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு, ஆஸ்திரேலியாவிலே கோயில் மணியோசை எழுப்பும் குருக்களுக்கு!