Saturday, 27 June 2026
Monday, 10 July 2023
சீன நாட்டு நண்பரும்
எருமை மாட்டுப் புல்லும்!
ஆசி கந்தராஜா (2018)
அன்று சனிக்கிழமை!
சிட்னியிலுள்ள பிளெமிங்டன் என்ற இடத்தில், மிகப் பெரிய சந்தை கூடும்
நாள்.
அன்று பல்லின மக்களுக்குத் தேவையான மரக்கறிகள்
தொடக்கம் மீன், இறைச்சி வகைகள் வரை அங்கு
பிறெஸ்ஸாகவும் மலிவாகவும் சில்லறையாகவும் வாங்கலாம். முதல்முறை பிளெமிங்டன்
சந்தைக்குப் போகின்றவர்களுக்கு நிச்சயம் அது ஒரு புதுவகையான அனுபவம். அங்கு வரும்
ஆங்கிலோ ஆஸ்திரேலியர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். சந்தைக்கு வருபவர்களுள் பெரும்பான்மையோர்
புலம் பெயர்ந்த பல்லின மக்களே.
இங்கு எமக்கு இன்னொரு வசதியுமுண்டு. உடன்
பிறப்புக்களான ‘எங்கட பெடியங்கள்’ இங்குள்ள மீன் கடைகளில் வேலை செய்கிறார்கள்.
இதனால் பாரை, ஒட்டி, சீலா, விளை, திரளி என மீன்களின்
தமிழ்ப் பெயரைச் சொல்லி வாங்கவும், பேரம் பேசவும், குழம்புக்கு ஏற்றமாதிரி
‘யாழ்ப்பாண வெட்டு’ என்று மீனை வெட்டி வாங்கவும் முடியும். அலுவல் முடிந்து
திரும்பியதும் ‘உவங்கள் இப்ப படகிலை வந்த பெடியள், கொஞ்சம் கவனமாய் இருக்கவேணும்’ என கொமன்ற் அடிப்பதையும்
மீன் கடைகளுக்கு அருகில் சர்வ சாதாரணமாக கேட்க முடியும்.
சனிக்கிழமை அதிகாலை ஐந்து மணிக்கு துவங்கும் பிளமிங்டன் விவசாயிகளின் சந்தை, பகல் இரண்டு மணிக்கு முடிவடையும். வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் சிறிய அளவில் சந்தை கூடுவதுண்டு. தமிழ் மகா ஜனங்கள் பெரும்பாலும் சந்தை கலையும் நேரத்தில்தான் சாமான் வாங்கப் போவார்கள். இதற்கான காரணத்தை நான் இங்கு சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை...
வெடுக்குப் பத்தன்
பத்தன் என்கிற பத்மநாதனை
சமீபத்தில் சந்தித்தேன். அவன், ஆயிரத்து தொழாயிரத்து அறுபதாம் ஆண்டுகளின் பிற்பகுதியில் என்னுடன் ஒரே
வகுப்பில் படித்தவன். எங்கள் வகுப்பில் அப்பொழுது இரண்டு பத்மநாதன் இருந்தார்கள்.
ஒருவன் நெடுவல். அதனால் அவன் நெடுவல் பத்தன். மற்றவன் வெடுக்குப் பத்தன். அவனில்
வேர்வை நாத்தம் அடிப்பதால் இந்தப் பெயர் அவனுடன் ஒட்டிக் கொண்டது. நாங்கள்
இருவரும் கல்லூரி விடுதியில் ஒன்றாக இருந்து படித்தோம். அதுவும் ஒரே Dormitory, பக்கத்து, பக்கத்துக் கட்டில்!
வெடுக்குப் பத்தன் ஊத்தையன் அல்ல. அவனுடைய
உடம்பிலிருந்து ஒருவகை நாத்தம் வீசுவது அவனுக்கும் தெரியும். சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம், யுனானி வைத்தியம், ஹோமியோபதி, அலோபதி (ஆங்கில
வைத்தியம்) என அவன் செய்யாத வைத்தியங்கள் இல்லை. எல்லா வைத்தியர்களும் முடிவாகச்
சொன்னது இதுதான்! அவனது உடம்பில் அதிக ரோமங்கள் இருப்பதாகவும் அதனால் சருமத்
துளைகள் வழியாக அதிக வியர்வை வெளியேறுவதாகவும், அடிக்கடி குளித்துச் சுத்தமாக இருப்பதே இதற்கான பரிகாரம் என்றார்கள். இதனால்
விடுதியில் அவன் மூன்று நேரமும் குளித்தான். வாரம் முழுவதும் நாங்கள் ஒரு ஷேட்
போடுவோம். சில வேளைகளில் நண்பர்களிடம் கடன் வாங்கியும் அணிந்து கொள்வோம். ஆனால்
பத்தன் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு ஷேட், தோய்த்து அயன்பண்ணிப் போடுவான். இருந்தாலும் அந்த மணம் அவனைவிட்டுப் போகவே
இல்லை.
கால ஓட்டத்தில் பல்கலைக்கழக புகுமுக வகுப்புச் சோதனை முடிந்ததும் நாங்கள் அனைவரும் ஒவ்வொரு திக்காக சிதறிப் போனோம்.
பூக்களே, காதல் செய்யுங்கள்...!
செல்லத்துரை அண்ணைக்கு 'ஹெளஸிங் கொமிஷன்' வீடு கிடைத்து
விட்டது...! அதுதான் அன்றைய மூத்தோர் ஒன்றுகூடலில், முக்கிய 'பேசு'பொருள்.
செல்லத்துரை அண்ணை சிட்னிக்கு புலம் பெயர்ந்து
வந்து இரண்டு வருடங்கள்தான் ஆகிறது. அதற்குள் எப்படி ‘ஹெளஸிங் கொமிஷன்’ வீடு
கிடைத்தது? என மூத்தவர்கள் மூக்கில்
விரலை வைத்தார்கள். சிலருக்கு இது ஆச்சரியம், பலருக்கோ பெரும் ஆதங்கம். மொத்தத்தில் எல்லோருடைய வயிறும் இதனால் புகைந்தது.
பெற்றோர் பிள்ளைகள் இணைப்பு விசாவில் ஆஸ்திரேலியா வருபவர்களுக்கு 104 கிழமைகளின் பின்னர், 'சென்றலிங்' பென்ஷன் கிடைக்கும். இது தானாகவே நடக்கும் சங்கதி. ஆனால் பென்ஷனுடன்
செல்லத்துரை அண்ணைக்கு ‘ஹெளஸிங் கொமிஷன்’ வீடும் கிடைத்ததைத்தான், பலராலும் விளங்கிக் கொள்ள
முடியவில்லை.
செல்லத்துரை அண்ணை, ஊரிலேயே வலு சுழியன்.
கமத்தொழில் சங்கம், கிராம அபிவிருத்தி சங்கம், சனசமூக நிவையம் என, அவர் வன்னியில் ஆதிக்கம்
செலுத்தாத அமைப்புக்கள் இல்லை. அந்த அநுபவம் ஆஸ்திரேலியாவிலும் கைகொடுத்ததால்
பிடிக்கிறவனை பிடித்து சட்டத்திலுள்ள ஓட்டைகளில் புகுந்து விழையாடி, அரசாங்கத்துக்கு சொந்தமான
‘ஹெளஸிங் கொமிஷன்’ வீட்டைப் பெற்றுவிட்டார். அதுவும் விசாலமான காணியுடன் ஒரு தனி
வீடு!
இரு வாரங்களுக்கு ஒருமுறை, செல்லத்துரை அண்ணைக்கும், மனைவி தங்கம்மா அக்காவுக்கும் 1322 டொலர்கள் பென்சன் கிடைக்கிறது. அதில் மிகச் சொற்ப தொகையையே வீட்டு வாடகை. குறைந்த கட்டணத்தில் நாள் முழுவதும் றெயினிலும், பஸ்ஸிலும் சுற்றித் திரிய மேலதிக வசதி. பிறகென்ன? ராஜ வாழ்க்கைதான்!
தம்பித்துரை அண்ணையும் பேரனும்
ஆறு ஐமிச்சங்களும்!
அரக்கப்பரக்க எனது
வீட்டுக்கு பேரனுடன் வந்தார் தம்பித்துரை அண்ணை. அவர் எனது வீட்டிலிருந்து பத்து
நிமிஷ நடைதூரத்திலுள்ள மகளின் வீட்டில் வசிக்கிறார். ஊரில் மட்டுமல்ல சிட்னியிலும்
அவரை தமிழரசு தம்பித்துரை என்றால்தான் தெரியும். அந்த அளவுக்கு இருபதாம்
நூற்றாண்டின் அறுபது எழுபதுகளில் தமிழரசுக் கட்சிக்காகவே உயிரைக் கொடுத்து
உழைத்தவர். இதனால் இன்றும் அரசியல் மற்றும் உலக நடப்புக்கள் அனைத்தையும்
ஆதியோடந்தமாக அறிந்து வைத்திருப்பார். தம்பித்துரை அண்ணை இலங்கையில் அரச விசாயப்
பண்ணை ஒன்றை தனி ஆளாக நின்று திறம்பட நிர்வகித்தவர். அவரின் அரசியல் நிலைப்பாடு
காரணமாக சிங்கள மேலதிகாரியுடன் முரண்பட்டு அரசாங்க வேலையைத் தூக்கி எறிந்தபின், ஊரில் பல விவசாயப்
புரட்சிகள் செய்தவர். சுற்றி வளைத்துப் பார்த்தால் அவர் எனக்கு உறவும்கூட. அந்த
பந்தமும் பாசமும் சிட்னியிலும் தொடர்வதினால் தனது அறிவெல்லைக்கு அப்பாற்பட்ட
ஐமிச்சங்களைத் தெளிவுபடுத்துவதற்கு அவர் என்னிடம் வருவார். அந்த வகையில், இன்றும் தம்பித்துரை அண்ணைக்கு பல ஐமிச்சங்கள். உள்ளதைச்
சொன்னால் பயம் கலந்த ஐமிச்சம். அதுவும் அவர் அன்றாடம் இரண்டு வேளை சாப்பிடும் சோறு
பற்றிய ஐமிச்சம்.
ஐமிச்சம் 1:
என்.பி.கே…!
அந்த சுற்று வட்டாரத்தில்
உடையார் வளவைத் தெரியாதவர்கள் இல்லை. அந்த அளவுக்கு வன்னி நிலப்பரப்பில்
பிரபல்யமான குடும்பம் அது. மாங்குளத்தில் அவர்களுக்கு ஏராளமான நெல் வயல்கள்
சொந்தமாக இருந்தன. இதற்கான நதி மூலத்தை பொன்னையா வாத்தியார் ஒரு சந்தர்ப்பத்தில்
சொன்னார். இலங்கையை ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில் முடிக்குரிய காணிகளை முறைப்படி
பதிவு செய்ய, உடையார் என்னும் பதவியை
உருவாக்கினார்களாம். இவர்கள் ஊரிலுள்ள அரச காணிகளை ஆவணப்படுத்தும் போது, பத்தோடு பதினொன்றாக சில காணிகளை
தங்களுடைய பெயர்களிலும் பதிவு செய்தார்களாம். இதனால் இவர்கள் பெருந் தொகையான காணி
பூமிகளுக்குச் சொந்தக் காரர்களாகி நிலச் சுவாந்தர்களானார்கள்.
உடையாரின் பேரன் ஐயாத்துரை என்னுடன்
யாழ்ப்பாணப் பாடசாலை ஒன்றில் ஒன்றாகப் படித்தவன். நல்ல நண்பன். உடையார் குடும்பத்தின்
ஒரே ஆண்வாரிசு. இதனால் குடும்பச் சொத்தைப் பாதுகாக்கவென, பன்னிரண்டாம் வகுப்புடன்
படிப்பை நிறுத்திவிட்டான். பின்னர் ஊர்ப் பாடசாலை ஒன்றில் மாணவ ஆசிரியராகி கால
ஓட்டத்தில் பயிற்றப்பட்ட ஆசிரியராகிவிட்டான். ஐயாத்துரையின் வீட்டில் எந்த நேரமும்
உலை கொதிக்கும், அடுப்பில் ஏதோ ஒருவகை
இறைச்சி அவியும். வந்தவர்கள் அங்கு கை நனைக்காமல் போவதில்லை. அவ்வப்போது நானும்
குடும்பத்துடன் அவனுடைய வீட்டுக்குப் போய் விடுமுறையைக் கழிப்பதுண்டு. அவை மிகவும்
மகிழ்ச்சியான நாள்கள்.
ஈழப் போராட்டம் துவங்கி, வன்னியில் போர் உக்கிரமான காலமது!
Tuesday, 2 February 2021
புனைவுக்கட்டுரைகளின்
முகவுரைகள்.
1. கறுத்தக் கொழும்பான்
- ஜெயமோகன்
2. செல்லப்பாக்கியம்
மாமியின் முட்டிக் கத்தரிக்காய்.
- வாசந்தி
- வ. மகேஸ்வரன்
- தி. ஞனசேகரன்
1. கறுத்தக் கொழும்பான். ஜெயமோகன்.
பயணியின் புன்னகை:
ஆசி கந்தராஜாவின் கறுத்தக் கொழும்பான் நூல் பற்றி
ஜெயமோகன்….
பயணியின் புன்னகை: ஆசி கந்தராஜாவின் கறுத்தக் கொழும்பான் நூல் பற்றி
ஜெயமோகன்….
எங்களூரில்
அந்தக் காலத்தில் பட்டாளத்துக் காரர்கள் தான் உலகச் சாளரங்கள். வடசேரி கனகமூலம்
சந்தைக்கு காய்கறி வாங்கச்செல்வது, சுசீந்திரம் தேர்த்திருவிழா, திருவந்தபுரம் பத்மநாபசாமி ஆறாட்டுவிழாவுக்குச் செல்வது தவிர எங்களூரில் பயணம்
மேற்கொள்பவர்கள் அரிது. பெரும்பாலானவர்கள் ‘என்ன சாமி சொல்லுகது? குளித்துறைக்கு அப்புறம் ராச்சியமில்லை. தேங்காப்பட்டினம் கடலாக்கும் ’ என
நம்புகிறவர்கள்
அப்படிப்பட்ட சூழலில் இரும்பு லாடம் கட்டிய சப்பாத்துகளும் பச்சைக்கம்பிளிச் சீருடையும் டிரங்குப்பெட்டியுமாக வரும் பட்டாளத்துக்காரர்கள் அச்சமும் ஆர்வமும் ஊட்டும் அபூர்வப்பிறவிகள். அவர்களில் சிலர் லடாக் வரைக்கும் சென்றவர்கள். பனிமலைகளையும் பாலைவனங்களையும் கங்கையையும் பிரம்மபுத்திராவையும் பார்த்தவர்கள். ரேஷன் வந்துசேராமல் பன்னிரண்டு நாள்வரை பட்டினி கிடந்தவர்கள். படுகாயம்பட்ட காலுடன் நூறு கிலோமீட்டர் நடந்தவர்கள். பட்டாளத்தான் வந்துவிட்டால் ஊரே சுற்றிலும் திரண்டுவிடும்.
Saturday, 30 January 2021
செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய்…!
ஆசி கந்தராஜா
-1-
செல்லப்பாக்கியம் மாமி
என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது, மட்டுவில் முட்டிக்
கத்தரிக்காய்! இது பால் வெள்ளை நிறத்தில் உருண்டுதிரண்டு முட்டிவடிவில்
மினுமினுப்பாக இருக்கும்.
செல்லப்பாக்கியம் மாமி மட்டுவில் என்னும்
கிராமத்தில் பிறந்து, அங்கேயே பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியருக்கு வாழ்க்கைப்
பட்டவர்.
அவர் பிறந்ததும் வாழ்க்கைப் பட்டதும் மேட்டுக் குடி. இதனால், சிட்னிக்கு புலம் பெயர்ந்த பின்பும் அந்த ‘மிடுக்கு’ சற்றும் குறையாமல் மகள் குடும்பத்துடன் வாழ்ந்தார். சுற்றி வளைத்து எப்படியோ என்னுடைய மனைவியின் பாட்டன், சிங்கப்பூர் பென்சனியர், தனக்குச் சொந்தமெனச் சொல்லிக்கொண்டு எமது வீட்டுக்கும் அடிக்கடி வந்துபோவார். சரிகைக்கரை வைத்த நூல்சேலை கட்டி, தங்கச்சங்கிலி கோத்த மூக்குக் கண்ணாடியுடன் மிடுக்காக வலம் வரும் அவரை, எல்லோரும் மாமி என்றே அழைத்தார்கள். அதனால் எனக்கும் அவர் மாமியானார். அடிமட்டத்திலிருந்து நான் மேலே வந்தவன் என்பதும், அவரது பருப்பு என்னில் வேகாது என்பதும் அவருக்கு நன்கு தெரியும். இதனால் மாமியின் வடிகால் பெரும்பாலும் என்னுடைய மனைவியே!
கறுத்தக் கொழும்பான்
ஆசி கந்தராஜா
உடையார் மாமா மகா விண்ணன்.
அவரைச் சந்திப்பது எப்போதும் எனக்கு மகிழ்ச்சி தரும். அவரைப்போன்று ‘அச்சொட்டாக’
விவசாயம் சம்பந்தப்பட்ட சங்கதிகளைப் பேச நான் வேறு ஆளைக் கண்டதில்லை.
மாமா ஊரில் வாழ்ந்த காலத்தில் வயல் தோட்டம் துரவு என வசதியாக வாழ்ந்தவர். ‘அரைவாசி ஊரே அவருக்குச் சொந்தமாக இருந்தது’ என்று விண்ணாணம் பேசுபவர்கள் சொல்வார்கள். எப்படி இது சாத்தியமானதென ஒரு தடவை பாட்டியைக் கேட்டேன். இங்கிலீசுக்காரர் இலங்கையை ஆண்ட காலத்தில் தமது ஆட்சி அதிகாரத்தை இலகுவாக்க, மணியகாரன், உடையார், விதானையார் என்ற பதவிகளை உருவாக்கியதாகவும், பதவிக்கு வந்தவர்கள் தமது ஆட்சி அதிகாரங்களைப் பாவித்து ஊரில் உள்ள ‘அடுகாணி-படுகாணிகளை’ தம் வசமாக்கியதாகவும் பாட்டி சொன்னார். உடையார் மாமா வீடு கட்டியிருக்கும் ‘நாவலடி வளவு’ எங்கள் பாட்டனாருக்குச் சொந்தமானதென்று அம்மா சொல்லி வருத்தப்பட்டார்.
சாத்தானின் விரல்கள்
ஆசி கந்தராஜா
-1-
கடந்த இருபது வருடங்களாக, சிட்னியில் வசிக்கும் (2005) என்னுடய அம்மாவுக்கு வயது தொண்ணூறு. இந்த வயதிலும் அவருக்கு நோயற்ற திடகாத்திரமான
உடம்பு!
அவரின் முப்பத்திரண்டு பற்களும் ஒறிஜினல்.
சூத்தையோ, ஆட்டமோ அற்ற பால்
வெள்ளைப் பற்கள் அவை.
பல்வைத்தியரான என்னுடய மகன், அப்பாச்சியின் பற்களை
வெவ்வேறு கோணங்களில் படம் பிடித்து, பல்வைத்திய மாநாட்டு விரிவுரைகளில் காட்டிப் பெருமைப்படுவான்.
‘நல்ல காலம்! ஆஸ்ரேலியர்களுக்கு அப்பாச்சியின் பற்கள் இல்லை. அப்பாச்சி போல, இங்கே பிறந்தவர்களும்
இருந்தால், நான் கிளினிக்கை இழுத்து
மூடவேண்டும்’ என பேத்தியாருக்கு ‘கொமன்ற்’ அடிப்பான் பேரன்.
யாழ்ப்பாணத்து தண்ணியும், கைதடி முருங்கைக் காயும்தான், தனது உறுதியான பற்களுக்குக் காரணம் என்பது அம்மாவின் அசைக்க முடியாத நம்பிக்கை. முருங்கைக்காய் சமாசாரம்பற்றி பேச்சு வரும்போதெல்லாம் கைதடி முருங்கைக் காய்தான் திறமென அடம் பிடிப்பார். கைதடி, ஒரு கலட்டிப் பாங்கான பூமி. அங்கு எது வளருதோ இல்லையோ, முருங்கை மரங்கள் நன்கு வளர்ந்தன. எங்கள் கைதடி வளவிலும் அம்மா பலவகை முருங்கை மரங்களை நட்டிருந்தார். களிமுருங்கை, வலியன் முருங்கை, கட்டை முருங்கை, உலாந்தா முருங்கை என அம்மாவின் பாஷையில் அவற்றிற்கு வெவ்வேறு பெயர்கள்.
வரகு மான்மியம்
ஆசி கந்தராஜா
-1-
கோயில் குருக்கள்
தொலைபேசியில் தொடர்புகொண்டதாக மனைவி சொன்னாள்.
கோயில் கும்பாபிஷேகத்துக்கு வரகு வேணுமாம்!
‘வரகுக்கு, இங்கிலிசிலை என்ன பெயர்? எனவும் ஐயர் கேட்டவர். கோயில் விஷயமப்பா, சாட்டுச் சொல்லித்
தப்பாமல் எடுத்துக் குடுங்கோ…’
மனைவியின் குரலில் கட்டளையின் தொனி இருந்தது.
கோயில் குத்தம், குடும்பத்துக்கு கேடு
வரும் என்ற பயம் அவளுக்கு.
விவசாயப் பேராசிரியரான ஒருவர், வரகு எங்கே கிடைக்கும்…? என்ற தகவல் உட்பட, விவசாயம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் சகலகலா வல்லவனாக இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு, ஆஸ்திரேலியாவிலே கோயில் மணியோசை எழுப்பும் குருக்களுக்கு!
கிழக்கும் மேற்கும்
ஆசி கந்தராஜா
1: சோமநாதர் தாத்தாவும்
பொதுவுடமை வாதமும்
நண்பன் ஒருவன் தன்னை
‘கம்யூனிஸ்ற்’ எனச் சொல்லித் திரிந்தான். அது அவன் வாலிப முறுக்கோடு திரிந்த
காலம். பின்பு குடும்பம், பிள்ளைகள், பணம் என்று வசதிகள் வந்தபின், ஒப்புக்கு வெளியே
பொதுவுடைமை வாதம் பேசித்திரிந்தாலும், வீட்டில் அவன் சைவப்பழம்.
கம்யூனிச கொள்கைகளின் கேள்வி ஞானத்தில், பொதுவுடைமை சித்தாந்தம் பற்றி முழுதாக ஒரு புத்தகத்தையேனும் படிக்காத பலர், கம்யூனிச ஆட்சி நடக்காத நாடுகளிலே முதலாளித்துவம் வழங்கிய சுகபோக வாழ்வு வாழ்ந்துகொண்டு, தீவிர கம்யூனிசம் பேசுவதைக் கண்டிருக்கிறேன். கம்யூனிசம் பேசுதல் ‘புத்திஜீவிதத்தன’த்தை அடையாளப் படுத்துவதாக அவர்கள் நினைக்கிறார்களோ என நான் நினைப்பதும் உண்டு.
மரங்களும் நண்பர்களே…!
-1-
‘என்னை ஒரு டாக்குத்தர் ஆக்கிப் போடவேணும்’ என்பதில் அம்மா வலு குறியாக இருந்தார். அம்மா மட்டுமல்ல ஊரிலுள்ள மற்ற அம்மாக்களும் தங்கள் பிள்ளைகளுள் ஒருவரையாவது என்ஜினியர் அல்லது டாக்குத்தராக்க வேணுமென, ‘குத்திமுறி’வார்கள். என்ஜினியர் ஆவதற்கு கணக்கில் கெட்டிக்காரனாய் இருக்க வேணும். எனக்கு அது மட்டுமட்டு. இருந்தாலும் நல்ல ஞாபக சக்தி. எனவே டாக்குத்தர் படிப்புத்தான் எனக்கு சரிவரும் என்பது அம்மாவின் முடிவு. அம்மாவின் முடிவுக்கு அப்பீல் கிடையாது. இதனால் அம்மாவின் கட்டளைப்படி, நான் உயிரியல் பிரிவில் சேர்ந்து படித்தேன்.
ஒட்டாத மண்
ஆசி கந்தராஜா
1: வீடே கோயிலாக…
‘ஏன் பிள்ளை இவன் எதியோப்பா போறானாம்? அங்கை தானே பஞ்சம் பட்டினியாலே சனம் சாகுதெண்டு பேப்பரிலே போடுறாங்கள்’ என்று
என்னுடைய மனைவியைக் கேட்டார் அம்மா.
‘அதுதான் மாமி நல்லது. அங்கைபோய் எண்டாலும் கொஞ்சம் மெலிஞ்சு வரட்டன்’ எனப்
பதிலளித்தாள் மனைவி.
எனது எடை அதிகம் என்பது என் மனைவியின் அடிமனக் கவலை. மாரடைப்பக்கு இது வழி வகுக்கும் எனக் குடும்ப டாக்டரும் சில சந்தர்ப்பங்களிலே பயமுறுத்தி இருந்தார். எனது உடம்பு மெலிவதற்கு என் மனைவி பல நடவடிக்கைகளை முன்னெடுத்துப் பார்த்தும் விட்டாள். என் போக்கு அவளுக்கு நன்றாகவே தெரியும். இருபத்தைந்து வருட தாம்பத்திய வாழ்க்கை. மனுசன் றோட்டிலே இறங்கி நடக்காது என விலையுயர்ந்த ‘றெட்மில்’ மெஷினையும் வாங்கி வீட்டில் வைத்திருந்தாள். அதில் நடந்து உடற்பயிற்சி செய்தால் நேரம், தூரம், வேகம் மட்டுமல்லாது எவ்வளவு கலோரி சக்தி எரிக்கப்பட்டிருக்கிறது என்ற கணக்கையும் துல்லியமாகச் சொல்லும் என்று அந்த மெஷின் பற்றிய மான்மியத்தையும் அவள் சொல்லி முடித்தாள். அவளுடைய மனம் கோணாதிருக்க வேண்டும் என்பதற்காக இரண்டு நாள்கள் அதிலே மூச்சிரைக்க நடந்தும் ஓடியும் பார்த்தேன். மனைவி அருகில் நின்று வேகத்தைக் கூட்டியும் குறைத்தும் தன்னொலியன்ற ஊக்கப்படுத்தல்களை மேற்கொண்டாள். எனது ஊளைச் சதை ஓடும் வேகத்துக்கு ஏற்ப மேலும் கீழும் குலுங்குவதைப் பார்த்து பிள்ளைகள் சிரித்தார்கள்.
வீரசிங்கம் பயணம் போகிறார்
-1-
‘இனியெண்டாலும், குடிகாரற்றை உறைப்பைக் கொஞ்சம் குறையுங்கோ, வயித்திலை அல்சர் முத்தி, கான்சர் வரப்போகுது’ என இரவுச் சாப்பாட்டின் போது பல்லவியைத் துவங்கினாள் மனைவி. திருவாளர் வீரசிங்கமோ மனைவியின் ஆரோகணத்தை காதில் வாங்குவது கிடையாது. சாப்பாட்டு விஷயத்தில் வீரசிங்கம் சமரசம் செய்வதில்லை. அவருக்கு நல்ல ‘உறைப்புக்கறி’ வேணும். நான்கு தசாப்தங்களுக்கு மேலாக அவர் வெளிநாடுகளில் வாழ்ந்தாலும், காரசாரமான கறி சோறு இல்லாவிட்டால், அவருக்கு அன்று நித்திரை வராது. ‘தாய் பழக்கின பழக்கம்’ என்று மனைவி புறுபுறுப்பாள். புருஷனுக்கு உறைப்புக்கறி, தனக்கும் பிள்ளையளுக்கும் காரம் குறைந்த பால் கறி என்று, தினம்தினம் சமையல் அறையில் அவள் படும்பாடு, அவளுக்குத்தான் தெரியும்.
கோளமயமாதல்
ஆசி கந்தராஜா
-1-
‘கொட்டையுள்ள புளியாப் பாத்து வாங்கி வா’ என்றார் அம்மா. கொட்டை நீக்கிய
புளியில் கடைக்கார்கள் கலப்படம் செய்கிறார்கள் என்பது அம்மாவின் எண்ணம்.
அவுஸ்திரேலியாவில் கலப்படம் என்ற பேச்சுக்கே
இடமில்லை என்ற எனது வாதத்தை ‘புளி நம் நாட்டிலிருந்துதானே இறக்குமதியாகிறது’ என்ற
அம்மாவின் எதிர்வாதம் சாப்பிட்டு விட்டது.
புளி வாங்கி வரச் சொன்னபோதே, வீட்டில் இன்றைக்கு வெந்தயக் குழம்பு மணக்கும் என்பதை விளங்கிக் கொண்டேன். வெந்தயக் குழம்புக்குத் தனிச்சுவை சேர்ப்பது பழப்புளி என்பது அம்மாவின் வாகடம். சமையலின் சரியான பதத்தைத் தேர்ந்தெடுத்து, கணக்கான அளவிலே புளியைச் சேர்ப்பதில் அம்மா மிகுந்த கவனமெடுப்பார். இது, மூன்று தலைமுறையாக வந்துள்ள பழக்கம் என்று ஒருதடவை பக்கத்து வீட்டு மாமிக்கு அம்மா விளக்கியதும் நினைவுக்கு வருகிறது.
மைனாக்கள்
ஆசி கந்தராஜா
காலையில் காவா அருந்தும்
சடங்கு! அதைத் தொடர்ந்தே மாலை ஒரு மணிக்கு, மாநாட்டின் முதல் அமர்வு எனச் சொன்னார்கள். சர்வதேச மாநாடொன்றில் இந்த ஒழுங்கு
முறை, என் மனதுக்கு நெருடலாக
இருந்தது. பிஜியின் தலைநகர் சூவாவில், தென் பசிபிக் நாடுகளுக்கான பல்கலைக் கழகமொன்றுண்டு. அங்கு நடந்த விவசாய
மாநாடான்றில், ஆராய்ச்சிக் கட்டுரை
சமர்ப்பிக்கச் சென்றபோதே இந்த அனுபவம் எனக்கு ஏற்பட்டது.
பசிபிக் தீவுகளில் இயற்கையாக வளரும் தாவரம் காவா. இது மிளகு மற்றும் வெத்திலை குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் வேரை காயவைத்து இடித்து மாவாக்கி, தண்ணீரில் ஊறவிட்டு வடிகட்டி, காவா என்ற பானத்தைத் தயாரிப்பார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, தென் பசுபிக் நாடுகளான பிஜி, ஹவாய், டோங்கா, நியூகினியா உள்ளிட்ட தீவுகளில், திருமணம், பிறப்பு, மரணம் உள்ளிட்ட சடங்கு சம்பிரதாயங்களில் காவா முக்கிய பங்கு வகிக்கிறது.
விலாங்கு மீன்கள்
ஆசி கந்தராஜா
அந்த முடிவில் அவருக்கு
உடன்பாடில்லை…! அதற்கும் மேலால், அந்த முடிவைத் தீர்மானித்தவர்களில், அவரும் ஒருவர் என்பது அவரது மனதைச் சுட்டெரித்தது. மற்றவர்களுடன் ஒத்துப் போவதென்றால், போலிகளுக்குத் துணை போவதுதானோ…?
‘அபொர்ஜினி’ என்றழைக்கப்படும் ஆஸ்திரேலிய ஆதிவாசிகளுக்கு அரச நிறுவனங்கள், மற்றும் கல்விச்சாலைகளில் பல சலுகைகள் உண்டு. ஆனால் இந்த உதவிகள் உண்மையான ஆதிவாசிகளைச் சென்றடைவதில்லை என்ற கசப்பான உண்மை, பலருக்குத் தெரிவதில்லை. இதற்கான ‘சட்டப் புழைவாய்’களைப் புரிந்து கொள்ள, பரமலிங்கத்துக்கு அதிக காலம் செல்லவில்லை. சொந்த மண்ணில் உரிமைகள் மறுக்கப்பட்டு, இனக்கலவரம் என்ற பெயரால் உடமைகள் கொள்ளையடிக்கப்பட்டு, அகதியாக ஆஸ்திரேலியா வந்தவர் பரமலிங்கம். அந்த வேதனை இன்றும் அவரை வாட்டுவதால், ஆதிவாசிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளை, அவரால் பொறுக்க முடியவில்லை.